ஹைதராபாத்தை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு தகுதி பெற்ற தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா
ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. 54வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஷிகர் தவான் 50, கோஸ்வாமி 35, கேன் வில்லியம்சன் 36, மனீஷ் பாண்டே 25 ரன்கள் எடுத்தனர். தவான், வில்லியம்சன் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 15 ஓவருக்கு 141 ரன்கள் குவித்திருந்தது ஹைதராபாத் அணி. கடைசி 5 ஓவர்களில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ஓவர் முடிவில் 172 ரன்களை எடுத்தது ஹைதராபாத் அணி.
173 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சுனில் நரைன் மற்றும் கிறிஸ் லின் அதிரடி தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். நரைன் 29 ரன்களிலும் லின் 55 ரன்களிலும் அவுட்டாகினர். உத்தப்பா 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆண்ட்ரே ரசலும் ராணாவும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். கேப்டன் தினேஷ் கார்த்திக், பொறுப்புடன் ஆடி கொல்கத்தா அணியை வெற்றியடைய செய்தார். தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார்.
19.4 ஓவருக்கே இலக்கை எட்டி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளை பெற்று கொல்கத்தா அணி பிளே ஆஃபிற்குள் நுழைந்தது. ஹைதராபாத் அணி, முதல் அணியாக பிளே ஆஃபிற்குள் நுழைந்துவிட்டதால், இந்த தோல்வியால் அந்த அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.