இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் 6-ஆவது வெற்றியைப் பெற்ற கேரள அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியபோதும், புள்ளிகள் பட்டியலில் 22 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தது. அதநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட நார்த் ஈஸ்ட் அணி, போட்டியிலிருந்து வெளியேறியது.

கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் அபாரமாக ஆடின. 66-ஆவது நிமிடத்தில் கேரள வீரர் வினீத்திடம் பந்து செல்ல, அவர் வேகமாக கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினார். அப்போது நார்த் ஈஸ்ட் வீரர்கள் அவரைச் சூழ்ந்தனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட வினீத் 30 யார்ட் தூரத்தில் இருந்தபடி, கோல் கம்பத்தை நோக்கி பந்தை பறக்கவிட, அது கோலானது. இதையடுத்து ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தால் மைதானம் அதிர்ந்தது.

இதன்பிறகு உத்வேகம் பெற்ற கேரள அணி தாக்குதல் ஆட்டத்தில் களமிறங்கியது. அதேநேரத்தில் நார்த் ஈஸ்ட் அணி சரிவிலிருந்து மீள்வதற்கு போராடியது. எனினும் கோல் எதுவும் விழவில்லை.
இறுதியில் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.