Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியின் மானம் காத்த ஜடேஜா!! ரீ எண்ட்ரியில் இங்கிலாந்துக்கு ரிவிட் அடித்த ரவீந்திர ஜடேஜா

ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 292 ரன்களை எடுத்தது. 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இங்கிலாந்து அணி ஆடிவருகிறது.

jadeja played well and india all out for 292 runs
Author
England, First Published Sep 9, 2018, 8:38 PM IST

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 332 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தவான் 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ராகுல் மற்றும் புஜாரா ஆகிய இருவருமே தலா 37 ரன்கள் சேர்த்து அவுட்டாகினர். விராட் கோலி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். மூவருமே சிறப்பாக தொடங்கி அதை தொடராமல் பாதியிலேயே அவுட்டாகினர். இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தை விஹாரியும் ஜடேஜாவும் தொடர்ந்தனர். இன்றும் சிறப்பாகவே ஆடினர். ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் ஆகிய நால்வரும் மாறி மாறி பந்து வீசினர். எனினும் விஹாரியும் ஜடேஜாவும் இவர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு தெளிவாக ஆடினர்.

அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்த ஹனுமா விஹாரி 56 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு ஜடேஜாவுடன் இஷாந்த் சர்மா ஜோடி சேர்ந்தார்.  மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை வரை 94 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்கள் எடுத்திருந்தார் ஜடேஜா.

jadeja played well and india all out for 292 runs

உணவு இடைவேளை முடிந்து வந்ததும் இஷாந்த் சர்மா அவுட்டானார். அவருக்கு பின்னாடியே ஷமியும் சென்றுவிட்டார். விக்கெட்டுகள் விழவும் அடித்து ஆடிய ஜடேஜா, ரன்களை முடிந்தளவிற்கு உயர்த்தினார். கடைசி விக்கெட்டுக்கு தன்னுடன் ஜோடி சேர்ந்த பும்ராவை முடிந்தவரை பேட்டிங் முனைக்கு வரவிடாமல் ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் தட்டி அவரே ஆடிவந்தார். மொயின் அலி வீசிய 95வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் தட்டினார் ஜடேஜா. அப்போது பும்ரா ரன் அவுட்டானதால், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. 292 ரன்களுக்கு இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிந்தது. சிறப்பாக ஆடிய ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் நான்கு போட்டிகளில் ஆடாமல் கடைசி போட்டியில் அணியில் சேர்க்கப்பட்ட ஜடேஜா, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆடினார்.

ஜடேஜாவின் தெளிவான பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி, 40 ரன்கள் மட்டுமே பின் தங்கியது. இல்லையென்றால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கும். இதையடுத்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, டீ பிரேக் வரை விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios