Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எனது பயிற்சியாளர் (ராஜ்குமார் சர்மா) மீது உள்ள மரியாதையின் காரணமாக இப்போதும் அவருக்கு பயப்படுகிறேன் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கூறினார்.

மூத்த பத்திரிகையாளர் விஜய் லோகபல்லி, விராட் கோலி குறித்து "டிரிவன்' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கோலியுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், வீரேந்திர சேவாக், இந்திய அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோலி பேசியதாவது: உறவுகளில் விசுவாசத்தை எதிர்பார்ப்பவன் நான். அதனாலேயே இதுவரை எனது பயிற்சியாளரை (ராஜ்குமார் சர்மா) நான் மாற்றவில்லை. இனியும் அவரை மாற்றப்போவதில்லை. அதேபோல், ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நான், அந்த அணியில் இருந்து மாறப்போவதுமில்லை.

சர்வதேச கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ள போதிலும், இப்போதும் எனது பயிற்சியாளரிடம் எனக்கு அச்சம் உள்ளது. அவர் என்னை நல்வழிப்படுத்துவதற்காக திட்டக்கூடியவர். அவர் மீதான மரியாதையின் காரணமாகவே, இப்போதும் அவரிடம் எதையும் கூறத் தயங்குகிறேன். நம் வாழ்வில் இதுபோன்ற ஒருவர் இருப்பது மிகவும் நல்லது என்று கோலி கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சேவாக், கோலி குறித்து பேசுகையில், "ரஞ்சிக் கோப்பை போட்டியின்போது கோலியின் ஆட்டத்தைப் பார்த்த பிரதீப் சங்வான், "இந்தச் சிறுவன் (கோலி) ஒருநாள் உங்களைவிட சிறப்பாக விளையாடுவான்' என்று என்னிடம் கூறினார்.

அப்போதே கோலி யார் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமடைந்தேன். ஆனால், பிற்காலத்தில் அவர் கூறியதைக் காட்டிலும் சிறப்பாக விளையாடி கோலி ஆச்சரியமளித்துவிட்டார்' என்றார்.

இந்திய அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறுகையில், "போட்டிக்காக கோலி தயாராவதை நான் ரசிக்கிறேன். அதேபோல், அவர் தவறு செய்தாலும், அதை நேர்மையாக ஒத்துக்கொள்வார்' என்றார்.