Its hard to ever meet the Indian team on its own soil - Newsealand Captain ...

எப்போதுமே இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது மிகக் கடினமானது என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

இந்தியா - நியூஸிலாந்து இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 22-ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. அந்தத் தொடருக்காக மும்பையில் நியூஸிலாந்து வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியது:

“குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகிய இருவரும் மிகப்பெரிய திறமைசாலிகள். ஐபிஎல் போட்டியின்போது மிகப்பெரிய அனுபவத்தைப் பெற்ற அவர்கள் இருவரும் இப்போது இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் இருவரும் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். எனவே, வரக்கூடிய தொடரில் குல்தீப், சாஹல் கூட்டணி எங்ளுக்கு கடும் சவால் அளிக்கும் என்று தெரியும்.

சர்வதேச அளவில் சைனாமேன் பெளலர்கள் மிகக் குறைவு. ஆனால் அவர்கள் அனைவருமே தங்களின் பந்துவீச்சால் சாதித்திருக்கிறார்கள். எனவே சைனாமேன் பெளலரான குல்தீப் எங்கள் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்.

அதேநேரத்தில் இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு நாங்கள் எப்படி எங்களை தகவமைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியமானதாகும்.

இந்திய அணியில் திறமைபடைத்த ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய அணி சமீபத்திய காலங்களில் ஏராளமான தொடர்களில் விளையாடியுள்ளது. அதனால் முன்னணி வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுப்பது என்பது இயல்பானதுதான்.

கோடைகாலங்கள் முழுவதும் நாங்கள் தொடர்ச்சியாக விளையாடியபோது, இதேபோன்றுதான் வீரர்களுக்கு ஓய்வளித்தோம். எல்லா காலங்களிலும் எல்லோரும் அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடுவது என்பது இயலாத ஒன்று.

ஏனெனில் தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறுகின்றன. எனவே வீரர்களுக்கு ஓய்வளிப்பது இயற்கைதான். எனினும் இந்தியா வலுவான அணியாகவே களமிறங்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

எப்போதுமே இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது மிகக் கடினமானது என்பதை அனைத்து எதிரணிகளும் சமீபத்தில் தெரிந்து கொண்டுள்ளன. 

கடந்த ஆண்டு இங்கு சுற்றுப்பயணம் செய்தபோது, நன்றாக ஆடினோம். ஆனால் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கவில்லை. அந்தத் தொடர் எங்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. மீண்டும் இங்கு விளையாட வந்திருப்பது இனிமையாக இருக்கிறது. 

எங்கள் அணியில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான வீரர்கள் இங்கு விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். எனினும் நாங்கள் இன்னும் சிறப்பாக தயாராக வேண்டும். நாங்கள் விளையாடவிருக்கும் இரு பயிற்சி ஆட்டங்களும் எங்களுக்கு மிக முக்கியமானதாகும்” என்று தெரிவித்தார்.