It is impossible for me to work with kohli again - Kumble
இனிமேல் நானும், கோலியும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்பது தெரிந்த பிறகே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
அனில் கும்ப்ளே வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:
பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு என் மீது நம்பிக்கை வைத்து என்னை தலைமைப் பயிற்சியாளராக தொடருமாறு கேட்டுக்கொண்டதை கெளரவமாகக் கருதுகிறேன்.
கடந்த ஓர் ஆண்டில் இந்திய அணி நிறைய சாதனைகளை செய்தது. அதற்கான பெருமை கேப்டன், பயிற்சியாளர், உதவி அலுவலர்கள் என அனைவரையும் சேரும்.
எனது பயிற்சியளிக்கும் பாணியில் கேப்டன் கோலிக்கு மாற்று கருத்து இருப்பதாகவும், நான் தலைமைப் பயிற்சியாளராக தொடர்வதை அவர் விரும்பவில்லை என்றும் பிசிசிஐ சார்பில் திங்கள்கிழமை என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் நான் எப்போதுமே பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் இடையே இருக்கும் வரையறைக்கு மதிப்பளிக்கக்கூடிய நபர்.
எங்கள் இருவரிடையிலான பிரச்னையை தீர்க்க பிசிசிஐ முயற்சித்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இனிமேல் நானும், கோலியும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்பது தெரிந்த பிறகு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதே நல்லது என நம்பினேன்.
தொழில்முறை, கட்டுக்கோப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, வீரர்களின் செயலை பாராட்டும் திறன், ஒரு விஷயத்தை பல கோணங்களில் அணுகுவது போன்ற விஷயங்களை கடைப்பிடிக்கக்கூடிய நபர் நான். இருவர் இணைந்து செயல்பட வேண்டுமானால் மேற்கண்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.
பயிற்சியாளர் பதவியை ஒரு பிம்பத்தை எதிரொலிக்கும் கண்ணாடியாகவே பார்க்கிறேன். அதன்மூலம்தான் அணியை மேம்படுத்த முடியும். நான் பயிற்சியாளராக தொடர்வதில் மாற்றுக் கருத்துகள் நிலவுகிறது என்பது தெரியவந்தபோது, அந்தப் பதவியை பொருத்தமான நபரிடம் கொடுக்க, அதிலிருந்து நான் விலகுவதே சரி என முடிவு செய்தேன்.
கடந்த ஓர் ஆண்டாக இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றியது எனக்கு கிடைத்த கெளரவமாகும். அதற்காக கிரிக்கெட் ஆலோசனைக் குழு, பிசிசிஐ, நிர்வாகக் குழு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்ட இந்திய கிரிக்கெட்டின் நலம் விரும்பியாக எப்போதும் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
