ipl league matches finish today
ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிகின்றன. கடைசி இரண்டு லீக் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
ஐபிஎல் 11வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதின. ஐபிஎல் தொடங்கி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்றுடன் லீக் போட்டிகள் முடிகின்றன.
கடைசி நாள் வரை பிளே ஆஃபிற்கு தகுதி பெறும் அணிகள் உறுதியாகவில்லை. இதுவரை ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன. 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி நான்காவது இடத்தில் உள்ளது.
இதுவரை 13 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் 12 புள்ளிகளை பெற்றுள்ளன. நெட் ரன்ரேட் அடிப்படையில், மும்பை அணி 5வது இடத்திலும் பஞ்சாப் அணி 7வது இடத்திலும் உள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
மாலை 4 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னையும் பஞ்சாப்பும் மோதுகின்றன. டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி பெற்றால், 14 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில், மும்பை அணி பிளே ஆஃபிற்குள் நுழைந்துவிடும். ராஜஸ்தான் அணி வெளியேறிவிடும். மும்பை அணி தோற்றுவிட்டால், ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும்.
பஞ்சாப் அணி சென்னையை வீழ்த்தினால் 14 புள்ளிகளை பெற்றுவிடும். ஆனால் அதன் நெட் ரன்ரேட் மிகவும் குறைவாக உள்ளதால், மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே வாய்ப்புள்ளது. அதுவும் மும்பை தோற்று, பஞ்சாப் வென்றால் மட்டுமே அந்த வாய்ப்பும் கூட. இல்லையெனில் பஞ்சாப் பிளே ஆஃபிற்குள் நுழைய முடியாது.
ஆக மொத்தத்தில், பிளே ஆஃபில் நுழையும் கடைசி அணி, மும்பையாகவோ ராஜஸ்தானாகவோத்தான் இருக்கும். மும்பை வென்றால் மும்பை நுழையும். மும்பை தோற்றுவிட்டால், ஏற்கனவே நான்காவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் நுழைந்துவிடும்.
