ipl final in mumbai chennai vs hydrabad
ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி சிஎஸ்கே அணிக்கு 179 ரன்கள் இலக்க நிர்ணயித்துள்ளது.
11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7–ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் ‘பிளே–ஆப்’ சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் இறுதிசுற்றை எட்டின. இந்த நிலையில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இறுதிஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் –ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு கரண் சர்மா சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கலீல், சகா நீக்கப்பட்டு சந்தீப் மற்றும் கோஸ்வாமி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி ஐதராபாத் அணியின் சார்பில், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
இதில் கோஸ்வாமி 5(5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஷிகர் தவானுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மெதுவாக ரன்ரேட்டை உயர்த்தினர். இந்நிலையில் தவான் 26(25) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த கேப்டன் வில்லியம்சன் 47(36) ரன்கள் எடுத்திருந்த போது சர்மா பந்தில் அவுட் ஆகி, தனது அரை சத வாய்ப்பினை தவற விட்டார். அடுத்ததாக ஷகிப் அல்–ஹசனுடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார்.

இதில் ஷகிப் அல்–ஹசன் 23(15) ரன்களில் பிராவோ பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 3(4) ரன்களில் நிகிடி பந்தில் அவுட் ஆனார். அடுத்தாக பிராத்வெய்ட் 21(11) ரன்களில் கேட்ச் ஆனார். கடைசியில் யூசுப் பதான் 45(25) ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக, தாகூர், நிகிடி, சர்மா, பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் ஜதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.தற்போது சிஎஸ்கே விளையாடி வருகிறது.
