ipl criket

இன்று தொடங்குகிறது பத்தாவது ஐ.பி.எல்.போட்டித் தொடர்… ஐதராபாத்- பெங்களூர் அணிகள் மோதல்…

 பத்தாவது ஐ.பி.எல். டுவென்டி-20 தொடர்,இன்று தொடங்குகிறது. இம்முறை வித்தியாசமாக, எட்டு துவக்க விழாக்கள் எட்டு இடங்களில் நடக்க உள்ளன. 

பத்தாவது ஐ.பி.எல். டுவென்டி-20 தொடர் இன்று தொடங்கி, மே 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

தடை காரணமாக, சென்னை, ராஜஸ்தான் அணிகள் இந்த ஆண்டும் பங்கேற்கவில்லை. 47 நாட்கள் நடைபெற உள்ள இத்தொடரில், மொத்தம் 60 போட்டிகள் நடைபெறும்.

போட்டிகளை நடத்துவது குறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், மாநில சங்கங்களுக்கும் இடையே மோதல் நிலவுவதால், இம்முறை, வித்தியாசமாக 8 அணிகளும் தங்களது சொந்த மண்ணில் தனிப்பட்ட முறையில் துவக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
சிறந்த அதிரடி வீரர்களை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியவில்லை.

அந்த அணி 3 தடவை இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. இதனால் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்று ஆர்வத்தில் உள்ளது. அனைத்து ஐ.பி.எல்.லிலும் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் இதுவரை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இல்லை. இதனால் இந்த தடவையாவது முன்னேற்றம் காண போராடும்.



கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 3-வது முறையாகவும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது தடவையாகவும் கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. இதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் புதிய அணிகளான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளும் முதல் முறையாக கோப்பைக்காக காத்திருக்கின்றன.

இன்று ஐதராபாத்தில் நடைபெறும் துவக்க விழாவில், சீனியர் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் லட்சுமண் ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர்