IPL 2018 CSK vs DD at Pune Full Cricket Score Chennai Super Kings beat Delhi Daredevils by 13 runs

புனேவில் நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி 13 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐபிஎல் தொடரின் இன்றைய 30-வது லீக் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி சென்னை அணியின் ஷேன் வாட்சன், டு பிளிசிஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

முதல் நான்கு ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள் தான் எடுத்திருந்தது. 5-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரில் வாட்சன் இரண்டு சிக்சரும், டு பிளிசிஸ் ஒரு சிக்சரும் விளாசினார்கள்.

6-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை வாட்சன் சிக்சருக்கு தூக்கினார். அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 50 ரன்களை கடந்தது. கடைசி பந்தை டு பிளிசிஸ் பவுண்டரிக்கு விரட்டினார்.

7-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரிலும் வாட்சன் இரண்டு சிக்சர் அடித்தார். 9-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி 25 பந்தில் அரைசதத்தை கடந்தார் வாட்சன். சென்னை அணி 10.2 ஓவரில் 100 ரன்களை தொட்டது.

சென்னை அணி 10.5 ஓவரில் 102 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பின் வந்த சுரேஷ் ரெய்னா 1 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறியதால், அம்பத்தி ராயுடுவுடன்-வாட்சன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடி வந்த வாட்சன் 40 பந்துக்கு 78 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, டோனி களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் சென்னை அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது. 17-வது ஓவரை டிரென்ட் போல்டு வீசினார். இந்த ஓவரில் டோனி இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியும், அம்பதி ராயுடு ஒரு பவுண்டரியும் அடிக்க சென்னை அணி அந்த ஓவரில் 21 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து இருவரும் கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், சென்னை அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி சார்பில் டோனி 22 பந்துக்கு 51 ரன்களும், ராயுடு 24 பந்தில் 41 ஓட்டங்களும், வாட்சன் 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்களாக பிரித்வீ ஷா-கோலின் முன்ரோ களமிறங்கினார்.

ஷா 9 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த அணியின் கேப்டன் அய்யர் 13, மற்றொரு துவக்க வீரர் முன்ரோ 26, அதிரடி ஆட்டக்காரர் மெக்ஸ்வேல்ஸ் 6 என வெளியேறியதால் டெல்லி அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இருப்பினும் தனி ஒருவனாக அதிரடி காட்டி வந்த ரிசப் பாண்ட் சென்னை அணியின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறிடித்தார்.

45 பந்துக்கு 79 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் சென்னை அணியின் பந்து வீச்சில் ருத்ரதாண்டம் ஆடினார்.

சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் என்ற போது கடைசி கட்டத்தில் விஜய் சங்கர் பவுண்டரி, சிக்ஸ்ர்கள் விளாசியதால் டெல்லி அணி வெற்றியை நோக்கி வந்தது.

31 பந்துக்கு 54 ரன்கள் எடுத்த நிலையில் சங்கர் வெளியேறியதால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.