indian women team win pakistan team
பெண்கள் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய இந்திய அணி பூனம் ரவுட் 47 ரன்களும் சுஷ்மா வர்மா 33 ரன்களும், தீப்தி ஷர்மா 28 ரன்களும் எடுத்தனர்

இறுதியில் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 169 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நஷ்ரா சந்து அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்கம் முதலே இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர்.
2-வது ஓவரின் 4-வது பந்தில் ஆயிஷா சபர் 1 ரன் எடுத்த நிலையில் ஏக்தா பிஸ்ட் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ஜவேரியா கான் 6 ரன்கள் எடுத்த நிலையில் கோஸ்வாமி பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
4-வது வீராங்கனையாக களம் இறங்கிய சித்ர நவாஸ், அடுத்து வந்த ஐரம் ஜாவித் ஆகியோரை ரன்ஏதும் எடுக்க விடாமல் அப்படியே பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் பிஸ்ட்.

இதனால் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
முதல் நிலை வீராங்கனைகள், அடுத்தடுத்து ஆட்டம் இழந்தபின், கடைநிலை வீராங்கனைகளால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இறுதியில் பாகிஸ்தான் அணி 38.1 ஓவரில் 74 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதையடுத்து இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஏக்தா பிஸ்ட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் இந்தியா தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.
