36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா…
இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 400 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 182.3 ஓவர்களில் 631 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 235 ரன்கள் குவித்தார். 9-ஆவது வீரராக களமிறங்கிய ஜெயந்த் யாதவ் 104 ரன்கள் எடுத்தார். கோலி-ஜெயந்த் யாதவ் ஜோடி 8-ஆவது விக்கெட்டுக்கு 241 ரன்கள் குவித்து இந்தியா இமாலய ஸ்கோரை குவிக்க உதவியது.
முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட 231 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 4-ஆவது நாள்(நேற்று) ஆட்டநேர முடிவில் 47.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. ஜானி பேர்ஸ்டோவ் 50 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி 49 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது.
இந்நிலையில் இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி எஞ்சியுள்ள 4 விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணித் தரப்பில் பந்துவீச்சில் அஸ்வின் 6, ஜடேஜா, 2, புவனேஷ்வர், ஜெயந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றியது.