தொடர்ச்சியாக இலங்கைக்கு மரண அடி கொடுத்து வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா…
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் பல்லகெலேவில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் லஹிரு திரிமானி அதிகபட்சமாக 105 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் எடுத்தார்.
சன்டிமல் 36 ஓட்டங்கள், சிறிவர்த்தனா 29 ஓட்டங்கள், கேப்டன் கபுகேதரா 14 ஓட்டங்கள், டிக்வெல்லா 13 ஓட்டங்கள், மேத்யூஸ் 11 ஓட்டங்கள் எடுத்தனர்.
இந்தியத் தரப்பில் பூம்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அசத்தலாக ஆடினார். ஷிகர் தவன் 5 ஓட்டங்கள், கேப்டன் விராட் கோலி 3 ஓட்டங்கள், கே.எல்.ராகுல் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர், கேதார் ஜாதவ் டக் அவுட் ஆனார்.
பின்னர் வந்த தோனி நிதானமாக ஆட, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 118 பந்துகளில் சதமடித்தார்.
இறுதியில் இந்திய அணி 45.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
தொடக்க வீரர் ரோஹித் சர்மா 145 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்கள், தோனி 86 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜஸ்பிரித் பூம்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின்மூலம் 3-வது வெற்றியைப் பெற்றிருக்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியுள்ளது.