குயான்டன்,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை வலைகோற் பந்தாட்ட போட்டியில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2–1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4–வது வெற்றி வாகைச் சூடியது.

4–வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

இந்த தொடரில் புதன்கிழமை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்ட இந்தியா–மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன.

12–வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரூபிந்தர்பால்சிங் இந்த கோலை அடித்தார். 18–வது நிமிடத்தில் மலேசிய அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் ரஹிம் ரஜி அபாரமாக இந்த கோலை திணித்தார்.

பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க பலமுறை முயற்சித்தாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடியலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் 58–வது நிமிடத்தில் இந்திய அணி 2–வது கோலை அதிரடியாக போட்டது. ரூபிந்தர்பால்சிங் இந்த கோலை அடித்தார். உள்ளூர் இரசிகர்களின் ஆதரவுடன் ஆடிய மலேசிய அணி பதில் கோல் திருப்ப கடுமையாக முயற்சித்தும் முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2–1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

5–வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற 4–வது வெற்றி இதுவாகும். தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் டிரா கண்டு இருந்தது. 4–வது ஆட்டத்தில் விளையாடிய மலேசிய அணி சந்தித்த முதல் தோல்வி இது. முதல் 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்று இருந்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான்–சீனா அணிகள் பிற்பகல் 3.30 மணிக்கும், தென் கொரியா–மலேசியா அணிகள் மாலை 6 மணிக்கும் மோதுகின்றன.