இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஆட்டத்தின் நேரம் மாற்றம் - பிசிசிஐ அறிவிப்பு...
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இலங்கை அணி தலா 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இதில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு நாள்களும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
வட இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு பரவலாக இருக்கும். அவ்வப்போது மழை பொழியவும் வாய்ப்புள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் டிசம்பர் 10-ஆம் தேதி இமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
மேலும், இரண்டாவது ஆட்டம் 13-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம், மொஹாலி நகரிலும் நடைபெறுகின்றது.
எனவே, பருவநிலையைக் கவனத்தில் கொண்டு அந்த இரண்டு ஒரு நாள் ஆட்டங்களை மட்டும் நண்பகல் 1.30 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு தொடங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தாற்காலிகச் செயலர் அமிதாப் சௌதரி நேற்று வெளியிட்ட அறிக்கை: "இமாசலப் பிரதேச கிரிக்கெட் சங்கம், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகு, ஆட்டங்கள் தொடங்கும் நேரம் நண்பகல் 1.30 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள 3-வது ஒரு நாள் ஆட்டம் வழக்கம்போலவே நண்பகல் 1.30 மணிக்குத் தொடங்கும்" என்று அதில் கூறியிருந்தார்.