ஹாக்கி போட்டியில் உலகின் 3-ஆம் நிலை அணியான பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா அசத்தல்...
நான்கு நாடுகள் ஹாக்கி போட்டியில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் உலகின் 3-ஆம் நிலை அணியான பெல்ஜியத்தை வீழ்த்தியது.
நான்கு நாடுகள் ஹாக்கி போட்டியின் இந்த ஆட்டத்தில் முதல் கோல் இந்தியாவுக்கு கிடைத்தது. 4-வது நிமிடத்தில் விவேக் சாகரின் உதவியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் அருமையாக கோலடித்தார் ரூபிந்தர் பால் சிங்.
இதற்கு பதிலடியாக பெல்ஜியத்தின் ஜான் டோமென் 17-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 24-வது நிமிடத்தில் இரு அணிகளுக்குமே பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இதில் பெல்ஜியத்தின் துல்லியமான கோல் முயற்சியை தடுத்தார் இந்திய கீப்பர் ஸ்ரீஜேஷ். இந்தியாவுக்கான வாய்ப்பை ரூபிந்தர் பால் சிங் வீணடித்தார். இதனால் முதல்பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
பிற்பாதி ஆட்டத்தில் முன்னிலை பெற இரு அணிகளுமே ஆட, 37-வது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் ஃபெலிக்ஸ் டெனாயர் அணியை முன்னிலைப்படுத்தினார்.
அதற்கு பதிலடியாக 42-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி ஆட்டத்தை சமன் செய்தார் இந்திய வீரர் ரூபிந்தர் பால் சிங். எனினும், 45-வது நிமிடத்தில் பெல்ஜியம் மீண்டும் 3-2 என முன்னிலை பெற்றது.
அடுத்த நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் அடித்த கோலால் ஆட்டம் மீண்டும் சமனானது. 53-வது நிமிடத்தில் லலித் உபாத்யாய் கோலடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.
பின்னர், பெல்ஜியத்தின் டாம் பூனும் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இறுதியில் தில்பிரீத் சிங் கடைசி நிமிடத்தில் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்த ஹாக்கி போட்டியின் முதல் பகுதி இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் வீழ்ந்திருந்த இந்தியா, தற்போது 2-வது பகுதியின் 2-வது ஆட்டத்தில் அந்த அணியை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.