நான் சொன்னமாதிரி பதக்கத்தை வென்றேன்; அரியானா அரசு சொன்னமாதிரி எப்போ பரிசை வழங்கும்? சாக்ஷி மாலிக் கேள்வி…
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நான் சொன்ன வாக்கை காப்பாற்றினேன். எனக்கு பரிசுத் தொகை அறிவித்த அரியானா அரசு அதனை எப்போது காப்பாற்றும் என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனையுடன் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைப்பெற்றது.
இந்த போட்டிகளில் இந்தியாவின் பதக்க கனவை தீர்க்கும் வகையில் வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்.
அவரின் இந்த சாதனைக்கு பரிசாக அரியானா மாநில அரசு சாக்ஷி மாலிக்குக்கு ரூ.2½ கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும், அவருக்கு அரசு வேலை மற்றும் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிப்பும் வெளியிட்டது.
ஆனால், அறிவித்தபடி பரிசுத்த தொகையினை அரியானா மாநில அரசு அவருக்கு வழங்கவில்லை.
சாக்ஷி மாலிக் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், “ஒலிம்பிக் பதக்கம் வெல்வேன் என்ற எனது வாக்குறுதியை நான் காப்பாற்றி விட்டேன்; அரியானா அரசு எப்போது அறிவித்ததை வழங்கும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவர் “எனது ஒலிம்பிக் பதக்க வெற்றிக்குப் பிறகு அரியானா அரசு அறிவித்த பரிசுகள் அனைத்தும் ஊடகங்களுக்கான வெற்று விளம்பரங்கள் மட்டும்தானா?” என்றும் வேதனையுடன் வெளிப்படுத்தி உள்ளார்.