நாட்டுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சியடைகிறேன் – சிந்து பெருமிதம்
நாட்டுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் பிவி.சிந்து 19-21, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்,
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிந்து, “தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போனது மிகுந்த வருத்தமளிக்கிறது. 3-வது செட்டில் 20-20 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும்போது எல்லோருமே தங்கப் பதக்கம் வெல்வதற்கு தீவிரம் காட்டுவார்கள். நானும் தங்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியிருந்தேன். ஆனால் கடைசி நிமிடம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
நஜோமியும் எளிதில் வீழ்த்தக்கூடிய வீராங்கனை அல்ல. நாங்கள் இருவரும் மோதுகிற போதெல்லாம் ஆட்டம் மிகுந்த சவால் மிக்கதாவே இருந்திருக்கிறது. நான் நஜோமியை ஒருபோதும் எளிதாக எடுத்துக் கொண்டதில்லை.
சவால் மிக்க இறுதி ஆட்டத்துக்காக நான் சிறப்பாக தயாராகியிருந்தாலும், இந்த நாள் என்னுடைய நாளாக இல்லை. இந்த ஆட்டம் ஏறக்குறைய ஒரு மணி, 49 நிமிடங்கள் நடைபெற்றது.
இதுபோன்ற ஆட்டங்கள் உடலளவிலும், மனதளவிலும் கடினமானதாகும். இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நான் வெள்ளி வென்றிருக்கிறேன். சாய்னா வெண்கலம் வென்றிருக்கிறார். அதற்காக இந்தியர்களாகிய நாங்கள் பெருமை கொள்கிறோம்.
நாட்டுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஏராளமான பதக்கங்களை வெல்வேன்” என்று அவர் தெரிவித்தார்.