I admit that we did not reveal a great deal - Kohli ...

நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் அஸ்வினின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

பத்து ஓவர்களை வீசிய அஸ்வின் 70 ஓட்டங்களை வாரி வழங்கினார். ஆனால் அவரால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக கோலி பேசியது:

“தட்டையான ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும். அதனால், சுழற்பந்து வீச்சில் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஓட்டங்கள் குவிக்கத்தான் செய்வார்கள்.

ஓவல் போன்ற ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுகிறபோது, அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகக் கடினமாகிவிடும்.

ஒரு பேட்ஸ்மேன் தனது திட்டத்தை சரியாக செயல்படுத்தி ஆடுகிறபோது, பந்துவீச்சாளர்களால் சிக்ஸரையோ, பவுண்டரியையோ தடுக்க முடியாது.

ஒரு பேட்ஸ்மேன் அதிக சிரத்தை எடுத்து அதிரடியாக ஆட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், எப்படி பந்துவீசினாலும் அடிக்கத்தான் செய்வார்.

பாகிஸ்தான் அணியினர், அனைத்துத் துறைகளிலும் எங்களை முற்றிலுமாக வீழ்த்திவிட்டனர். அதனால் அவர்கள் வெற்றிப் பெற்றார்கள். அவர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை தவறு செய்ய வைத்ததோடு, நெருக்கடிக்கும் உள்ளாக்கினார்கள்.

அதேநேரத்தில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை” என்றுத் தெரிவித்தார்.