5-ஆவது ஹாக்கி இந்தியா லீக் (ஹெச்ஐஎல்) வலைகோல் பந்தாட்டப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தபங் மும்பை-ராஞ்சி ரேய்ஸ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் பிப்ரவரி 25-ஆம் தேதியும், இறுதிப் போட்டி 26-ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியானது, நடப்புச் சாம்பியனான பஞ்சாப் மாநிலத்தின் சண்டீகரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா லீக் ஆகியவற்றின் தலைவர் நரீந்தர் துருவ் பத்ரா கூறியதாவது:
“எதிர்வரும் ஹாக்கி இந்தியா லீக் போட்டியானது, ஹாக்கி விளையாட்டுப் போட்டியின் நிலையான வளர்ச்சியை பறைசாற்றுவதற்கான உதாரணமாக இருக்கும். இந்த ஆண்டு ஹாக்கிஇந்தியா லீக் போட்டியில், புதிதான ஊடகங்களின் மூலம் ரசிகர்களை ஈர்க்கவும், அதேவேளையில், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் வருமானத்தை பெருக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியில் சர்வதேச அளவிலான சிறந்த வீரர்களுடன் விளையாடும் காரணத்தால், இந்திய ஹாக்கி வீரர்களின் திறமை மேம்படும். இதன் மூலம் அவர்கள் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள இயலும்” என்று நரீந்தர் கூறினார்.
