5வது இடத்திற்கு அடித்துக்கொள்ளும் 5 வீரர்கள்!! யாருக்கு வாய்ப்பு?
உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெய்னாவின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக உள்ளது.
டிராவிட், லட்சுமணன், யுவராஜ், ரெய்னா என கடந்த காலங்களில் இந்திய அணி மிடில் ஆர்டரில் சிறந்து விளங்கியது. டாப் ஆர்டர்கள் சொதப்பினால் கூட மேட்ச்சை தூக்கி நிறுத்தக்கூடிய வகையிலான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கொண்டிருந்த இந்திய அணி, தற்போது மிடில் ஆர்டரில் திணறிவருகிறது.
ரோஹித், தவான், கோலி, ரஹானே என முதல் நான்கு இடங்கள் உறுதிப்படுத்தப்பட்டவை. தோனி, பாண்டியா முறையே 6 மற்றும் 7வது இடங்களில் களமிறங்குவர். இடையில் இருக்கும் 5வது இடத்திற்குத்தான் கடும் போட்டி நிலவுகிறது.
ரெய்னா ஓரங்கட்டப்பட்ட நிலையில், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் தென்னாப்பிரிக்க டி20 போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்ட ரெய்னா, கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார். அடுத்ததாக ஒருநாள் அணியிலும் இடம்பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 5வது இடத்தில் யார் களமிறங்குவது என்பது இன்னும் உறுதி செய்யப்படாத ஒன்றாகவே உள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர்:
ஷ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை ஃபீல்டிங்கில் மிகவும் சொதப்புகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு அவர் புதிது என்றாலும் இப்படிப்பட்ட ஃபீல்டிங்கை வைத்துக்கொண்டு உலக கோப்பையை வெல்வது கடினம். அவருக்கு பவுலிங்கும் போட தெரியாது.
தினேஷ் கார்த்திக்:
தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது கடினமே.
மனீஷ் பாண்டே:
சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஃபீல்டர். ஆனால் பவுலிங் போட மாட்டார். பகுதிநேர பந்துவீச்சாளரும் தேவைப்படும் நிலையில், பந்துவீச தெரிந்திருப்பதும் அவசியமாக உள்ளது.
கேதர் ஜாதவ்:
கேதர் ஜாதவ் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலுமே ஓரளவிற்கு பங்களிப்பை அளிக்கிறார்.
சுரேஷ் ரெய்னா:
இவர்கள் 5 பேருக்கும் 5வது இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. 5வது இடத்தில் பேட்டிங் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம். அந்த இடத்தில் இறங்கி சிறப்பாக பேட்டிங் ஆடுவது என்பது அனைவருக்கும் எளிதாக வந்துவிடாது.
தற்போதைய இந்திய அணியில், புவனேஷ், பும்ரா, பாண்டியா, சாஹல், குல்தீப் ஆகிய 5 பவுலர்களை கொண்டே இந்திய அணி பந்துவீசுகிறது. கூடுதலாக பகுதிநேர பந்துவீச்சாளர் ஒருவர் கூட இல்லை. மிடில் ஓவர்களில் பந்துவீச பகுதிநேர பவுலர் ஒருவர் தேவை. அதைக் கருத்தில் கொண்டால், மனீஷ், ஷ்ரேயாஸ், தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரும் அடிபட்டுவிடுவர்.
மீதமிருப்பது ரெய்னாவும் ஜாதவும். ரெய்னா மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.