மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி சீனாவின் மக்காவ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து 4-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து, கடந்த வாரம் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் பட்டம் வென்றதோடு, ஹாங்காங் ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய நிலையில், மக்காவ் ஓபனில் களமிறங்குகிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதன்கிழமை நடைபெறும் முதல் சுற்றில் சீனாவின் யூ ஹன்னுடன் மோதுகிறார் சிந்து. இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால், தனது முதல் சுற்றில் இந்தோனேசியாவின் ஹன்னா ரமாதினியை எதிர்கொள்கிறார். சிந்துவும், சாய்னாவும் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அவர்கள் இருவரும் இறுதிச்சுற்றில் மோத வாய்ப்புள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் சமீர் வர்மா தனது முதல் சுற்றில் செக்.குடியரசின் மிலன் லூதிக்கை சந்திக்கிறார். இந்தியாவின் காஷ்யப் தனது முதல் சுற்றில் மலேசியாவின் ஜெங் சிம்மையும், எச்.எஸ்.பிரணாய் தனது முதல் சுற்றில் சீன தைபேவின் வெய் சென்னையும் எதிர்கொள்கின்றனர்.

போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் உள்ளூர் வீரரான லாம் ஹூ ஹிம்முடன் மோதுகிறார்.