
மல்யுத்த வீராங்கனை கீதா போகத், ஹரியாணா மாநில காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) அந்த மாநில அரசால் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இந்த நியமனம் தொடர்பான மாநில உள்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தில்லியில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கீதா போகத் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மலையேற்ற வீரருக்கு உதவி ஆய்வாளர் பணி: அதேபோல், மலையேற்ற வீரர் ராம் லாலை விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் மூலம் ஹரியாணா காவல்துறையின் உதவி ஆய்வாளராக நியமிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
