இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், அதற்கு மாற்று ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார் சுனில் கவாஸ்கர்.  

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், அதற்கு மாற்று ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார் சுனில் கவாஸ்கர். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே 3-1 என வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியிலும் இங்கிலாந்தின் கையே ஓங்கிவருகிறது. 

இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் தான் தொடரை இழப்பதற்கு முக்கியமான காரணம். விராட் கோலி மற்றும் புஜாராவை தவிர வேறு எந்த இந்திய வீரரும் சதமடிக்கவில்லை. தொடக்க வீரர்கள் தவானும் ராகுலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்திய அணியின் தொடக்கம் ஒரு போட்டியில் கூட சரியில்லை. 

முதல் போட்டியில் சரியாக ஆடாத தவான், இரண்டாவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு மூன்றாவது போட்டியில் தவான் சேர்க்கப்பட்டு முரளி விஜய் தொடரிலிருந்தே அனுப்பப்பட்டார். முரளி விஜய் இந்தியாவிற்கு வெளியே அண்மைக்காலமாக சொதப்பிவருகிறார். இடது-வலது காம்பினேஷனான தவான் - ராகுல் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இருவருமே தொடர்ந்து சொதப்பிவருகின்றனர். 

பேட்டிங்கை பொறுத்தமட்டில் தொடக்கம் மிக முக்கியம். சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துவிட்டால், பிறகு வரும் வீரர்களுக்கு அது நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும். ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பிவருகின்றன. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ராகுலை நீக்கிவிட்டு பிரித்வி ஷாவை சேர்க்கலாம் என்ற குரல்கள் எழுந்தன.

ஆனால் ராகுல் தான் இந்த போட்டியிலும் களமிறக்கப்பட்டார். இந்த போட்டியிலும் பேட்டிங் வரிசை மளமளவென சரிந்தது. 160 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை, விஹாரி - ஜடேஜா தான் மீட்டெடுத்தது. விஹாரி-ஜடேஜா ஜோடி, 7வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். 

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி, ஆண்டர்சன், பிராட், ஸ்டோக்ஸ், மொயின் அலி, அடில் ரஷீத் என அனைவரையுமே மாற்றி மாற்றி பயன்படுத்தியது. ஆனால் மிகவும் பொறுமையாக பதற்றப்படாமல் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, இந்திய அணியை மோசமான நிலையிலிருந்து காப்பாற்றி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எடுக்க உதவியது. 

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த விஹாரி 56 ரன்களில் அவுட்டானார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஜடேஜா 86 ரன்கள் எடுத்திருந்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 292 ரன்களை எட்டியது. 

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது வர்ணனையாளர்கள் கலந்துரையாடலில், விஹாரியின் ஆட்டத்தை கவாஸ்கர் வெகுவாக பாராட்டினார். கருண் நாயருக்கு பதிலாக விஹாரிக்கு ஆட வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, கருண் நாயரின் பக்கத்தில் நியாயத்திற்கு ஆதரவாக நின்ற கவாஸ்கர், அதேநேரத்தில் விஹாரி நன்றாக ஆடியதும் அவரை பாராட்டவும் செய்தார். 

ஹனுமா விஹாரி பதற்றப்படாமல் மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் களத்தில் நின்று தெளிவாக ஆடினார். இவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது என வாழ்த்தவும் செய்தார். எதிர்காலத்தில் இவரை தொடக்க வீரராக கூட களமிறக்கலாம் என்ற ஆலோசனையையும் கவாஸ்கர் வழங்கினார்.