தோனி ஒரு ஆள் போதும்.. நான் உலக கோப்பையை ஜெயிச்சுருப்பேன்!! மனம் திறக்கும் தாதா
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சர்வதேச அளவில் மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது இந்திய அணி. இந்திய அணியின் இந்த அபரிமிதமான வளர்ச்சி திடீரென நிகழ்ந்துவிடவில்லை.
முன்னாள் கேப்டன்கள் கங்குலி, தோனி ஆகியோர் இந்திய அணியை மெருகேற்றியுள்ளனர். அதிலும் கேப்டனாக கங்குலியின் பங்களிப்பு அளப்பரியது. அணி வீரர்களின் அணுகுமுறையை மாற்றி அனைவரையும் ஒருங்கிணைத்து 2003ம் ஆண்டு உலக கோப்பையின் இறுதி போட்டிவரை அழைத்து சென்றார். கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பான வளர்ச்சியை அடைந்தது.
ஆனால் 2003 உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனது, பெரும் ஏமாற்றம்தான். இதுதொடர்பாக தனது சுயசரிதையில் கங்குலி எழுதியுள்ளார்.
அதில், ஒவ்வொரு போட்டியிலும் நெருக்கடியான நிலைகளை வீரர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை உற்று கவனிப்பேன். ஒரு கேப்டனாக அதை செய்ய வேண்டியது எனது கடமையும் கூட. எனக்கு தோனியை 2004ம் ஆண்டு அவர் அணியில் இடம்பெறும்போது தான் தெரியும். அதற்கு முன் தெரியாது. நாளுக்கு நாள் அவரது திறமை மேம்பட்டது. அதை பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். தோனியின் விளையாட்டும் எனக்கு மிகவும் பிடித்தது.
2003 உலக கோப்பை இறுதி போட்டியில், உலகின் சிறந்த அணியாக திகழ்ந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது. ஆனால், 2003 உலக கோப்பையில் தோனி, அணியில் இடம்பெற்றிருந்தால் போட்டியின் முடிவு கண்டிப்பாக மாறியிருக்கும். இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியிருக்கும். என்னைப் பொறுத்தவரை 2003ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியல் தோனி இடம் பெற்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று விரும்பினேன். ஆனால், அந்த நேரத்தில் இந்தியன் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியாற்றிக் கொண்டு இருந்தார் என கங்குலி தெரிவித்துள்ளார்.