ganguly believes india will win england series

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி தான் வெல்லும் என முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செல்லும் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆட உள்ளது. 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றை தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. 

இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த தொடரில் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளதால், இந்த தொடரை வெல்லுவது இந்திய அணிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். 

இந்நிலையில், இங்கிலாந்து தொடர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, இங்கிலாந்து தொடரை இந்திய அணி தான் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்திய அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடிய இந்திய அணி தொடரை வென்றது. அதேபோல, இங்கிலாந்திலும் ஆடினால் கண்டிப்பாக இந்திய அணி தான் வெற்றி பெறும் என தெரிவித்தார். 

அண்மையில் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அவற்றில் ஒன்றில் பாகிஸ்தானும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதை சுட்டிக்காட்டி பேசிய கங்குலி, இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தானே அந்த அணியை ஒரு போட்டியில் வீழ்த்திவிட்டது. பாகிஸ்தானை விட அனைத்து வகையிலும் சிறந்த அணியான இந்தியாவால் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியை பறிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.