5 அரைசதம்.. ஒண்ணு மட்டும் மிஸ்!! நியூசிலாந்தை தெறிக்கவிட்ட இந்தியா.. பதிலடி கொடுக்கும் நியூசி.,
இங்கிலாந்து தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டு, பின்னர் ஆஸ்திரேலிய தொடரில் அணியில் இடம்பிடித்துள்ள முரளி விஜய், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார். வெறும் 28 ரன்களுக்கே ஆட்டமிழந்தார் முரளி விஜய்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரஹானே, முரளி விஜய், பார்த்திவ் படேல், பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி ஆகிய 5 வீரர்களும் இந்தியா ஏ அணியில் ஆடிவருகின்றனர்.
முதல் போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் களமிறங்கினர். இங்கிலாந்து தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டு, பின்னர் ஆஸ்திரேலிய தொடரில் அணியில் இடம்பிடித்துள்ள முரளி விஜய், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார். வெறும் 28 ரன்களுக்கே ஆட்டமிழந்தார் முரளி விஜய்.
இதையடுத்து பிரித்வி ஷாவுடன் மயன்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். பிரித்வி ஷா 62 ரன்களிலும் அகர்வால் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரஹானே 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆனால் ஹனுமா விஹாரியும் பார்த்திவ் படேலும் அருமையாக ஆடினர். சிறப்பாக ஆடி அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடிய ஹனுமா விஹாரி, 86 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுபுறம் சிறப்பாக ஆடிய பார்த்திவ் படேலும் அரைசதம் கடந்தார். நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்திருந்தது. பார்த்திவ் படேல் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை பார்த்திவ் படேலும் விஜய் சங்கரும் தொடர்ந்தனர். சிறப்பாக ஆடிய பார்த்திவ் படேல் 94 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் கிடைத்த இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட விஜய் சங்கர் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். ஆனால் அவரும் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். கிருஷ்ணப்பா கௌதம் 47 ரன்களில் ஆட்டமிழக்க, 8 விக்கெட் இழப்பிற்கு 467 ரன்கள் எடுத்த நிலையில், முதல் இன்னிங்ஸை இந்தியா ஏ அணி டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, பார்த்திவ் படேல், விஜய் சங்கர் ஆகிய 5 வீரர்கள் அரைசதம் அடித்தனர். கிருஷ்ணப்பா கௌதம் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்து ஆடிவருகிறது.