Five gold medals for Tamil Nadu in national junior karate competition
தேசிய அளவிலான ஜூனியர் கராத்தே போட்டியில் தமிழகத்திற்கு ஐந்து தங்கப் பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளனர் தமிழக வீரர், வீராங்கனைகள்.
தேசிய அளவிலான ஜூனியர் கராத்தே போட்டி டெல்லி தால்கடோரா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், தேசிய அளவிலான ஜூனியர் கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்று ஐந்து தங்கப் பதக்கங்கள் வென்றனர்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய கராத்தே சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான ஜூனியர் கராத்தே போட்டி வியாழக்கிழமை (மே 11) தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில் 35 மாநிலங்களைச் சேர்ந்த 21 வயதுக்குள்பட்ட 1,700 இளம் கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் உள்பட சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். மொத்தம் 82 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில், 55 கிலோ எடைப் பிரிவு கராத்தே போட்டியில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த கெளசிக் அரவிந்த், சேலம் பிரியங்கா, 45 கிலோ பிரிவில் சேலம் சந்தோஷ், ஸ்ரீஹரி மற்றும் 25 கிலோ பிரிவில் கோவையை சேர்ந்த 10 வயது சிறுமி ஹரிதா ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
கோவையைச் சேர்ந்த அரவிந்த், நரேன் நல்லசாமி ஆகியோர் வெள்ளி வென்றனர்.
கோவையைச் சேர்ந்த சாய் குந்தவி, தக்ஷதா, சந்தோஷ் கமல், ஆகாஷ், நாகேந்திரா, அக்ஷய் சுபிஷா, புதுச்சேரியைச் சேர்ந்த திருஞானவேல் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
தேசிய ஜூனியர் கராத்தே போட்டியில் மேற்கு வங்கம் 8 தங்கப் பதக்கங்களுடன் முதலிடமும், மத்தியப் பிரதேசம், டெல்லி, ஹரியாணா அணிகள் தலா 7 தங்கப் பதக்கங்களுடன் 2-ஆவது இடமும், தமிழகம் 5 தங்கப் பதங்கங்களுடன் 5-ஆவது இடமும் பிடித்துள்ளன.
இதில் இந்திய கராத்தே சங்கத்தின் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், இந்திய கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் பரத் சர்மா, பொருளாளர் பீராஃப் வாட்சா, இந்திய காரத்தே சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரவி ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
