Dhoni is a superstar - Ravi Shastri has reacted to Dhoni critics ...

தோனி ஒரு சூப்பர் ஸ்டார். நம்முடைய சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். என்று ரவி சாஸ்திரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூஸிலாந்து டி-20 தொடர் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது டி-20 ஆட்டத்தில் தோனி 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றிப் பெற்றது. இதனையடுத்து, டி-20 போட்டிகளில் இளைஞர்களுக்கு வழிவிடுவது குறித்து முன்னாள் கேப்டன் தோனி சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மண் தெரிவித்திருந்தார். அணியில் தோனியின் பங்களிப்பை அவருக்கு குழு மேலாண்மை புரிய வைக்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் தோனி குறித்த தங்களுடைய கருத்துகளை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர், "தோனி சரியாக விளையாடாமல் அவருக்கு மோசமான நாள்கள் அமைய வேண்டும் என நம்மைச் சுற்றியுள்ள பொறாமை பிடித்த பலர் எண்ணுவது போல உள்ளது. சிலர், தோனியின் இறுதி நாள்களைக் காண விரும்புகிறார்கள். ஆனால் தோனியைப் போன்ற சிறந்த வீரர்கள் அவர்களுடைய எதிர்காலத்தை அவர்களாக முடிவு செய்து கொள்வார்கள்.

தோனி மீதான விமர்சனங்களால் என்னிடம் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அணியில் தோனி எந்த இடத்தில் உள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஓர் அருமையான அணி வீரர். அற்புதமான தலைமைப் பண்புகளைக் கொண்டவர். நான் முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராகத் தொலைக்காட்சிகளில் பணியாற்றியபோது என்னிடம் சில கேள்விகள் கேட்கப்படும். அந்நிகழ்ச்சிக்காக நீங்கள் பதில்களைச் சொல்ல வேண்டும்.

தோனி ஒரு சூப்பர் ஸ்டார். நம்முடைய சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். எனவே அவர் எப்போதும் விவாதங்களில் இடம்பெறுவார். அவரைப் போன்ற ஒரு சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கை அமையும்போது அது தொலைக்காட்சிகளின் விவாதங்களில் மையமாக இருக்கும். கடந்த ஒருவருடத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் சராசரி - 65 ஓட்டங்கள். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற தோனி நிறைய உதவியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.