2019 மக்களைவை தேர்தல்: பாஜக வேட்பாளர்களாக களமிறங்கும் தோனி, காம்பீர்..?
2019 மக்களவை தேர்தலில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான கவுதம் காம்பீர் மற்றும் தோனி ஆகிய இருவரையும் வேட்பாளர்களாக களமிறக்க பாஜக முயற்சித்து வருகிறது.
2019 மக்களவை தேர்தலில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான கவுதம் காம்பீர் மற்றும் தோனி ஆகிய இருவரையும் வேட்பாளர்களாக களமிறக்க பாஜக முயற்சித்து வருகிறது.
2019 மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை சந்தித்து பாஜக அரசின் சாதனைகளை விளக்கி அவர்களின் ஆதரவை திரட்டும் பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. பிரபலங்களின் ஆதரவை திரட்டுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கும் முயற்சிகளிலும் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பாஜகவை சேர்ந்த 4000 பேர் குழு, பல துறைகளை சேர்ந்த ஒரு லட்சம் பிரபலங்களை சந்தித்து அவர்களின் ஆதரவை திரட்டும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த 4000 பேரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் அடக்கம்.
அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான தோனியை அமித் ஷா சந்தித்தார். அந்த சந்திப்பின்போது தோனியிடம் மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க புத்தகத்தை கொடுத்தார்.
இந்நிலையில், தோனி மற்றும் காம்பீர் ஆகிய இருவரையும் 2019 மக்களவை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்த பாஜக முயற்சித்துவருவதாக தி சண்டே கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்டை கடந்து பொது வாழ்விலும் காம்பீர் மிக நேர்மையானவர், சமூக அக்கறை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. காம்பீருக்கு டெல்லி மக்கள் மத்தியில் நல்ல மரியாதை உள்ளது. எனவே அதை பயன்படுத்திக்கொள்ள பாஜக முயற்சிக்கிறது.
அதேபோல இந்திய அணிக்கு மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த தோனியின் மீதும் மக்கள் மத்தியில் நல்ல அபிமானம் உள்ளது. எனவே இவர்கள் இருவரையும் 2019 மக்களவை தேர்தலில் களமிறக்க பாஜக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.