ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகரை, இந்திய ஜிம்னாஸ்டிக்கிற்கான தூதராக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கால்பந்து முன்னாள் வீரரும், மக்களவை எம்.பி.யுமான பிராசன் பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் வால்ட் பிரிவில் போட்டியிட்ட தீபா கர்மாகர், நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டு 4-ஆம் இடம் பிடித்தார்.
ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அவர், கடந்த 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
கடந்த 52 ஆண்டுகால வரலாற்றில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய வீராங்கனையை இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கான தூதராக நியமிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.
அவ்வாறு தீபா நியமிக்கப்படும் பட்சத்தில், அவரது வாழ்க்கையில் மேலும் பல சாதனைகளை அவர் எட்டுவதற்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று அந்தக் கடிதத்தில் பிராசன் பானர்ஜி கூறியுள்ளார்.
