dc vs rr no ball: அன்று தோனி இன்று ரிஷப் பந்த்: களநடுவர் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவி்த்து ரகளை
dc vs rr no ball: மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன் பாவெலுக்கு இடுப்பு உயரத்துக்கு புல்டாஸாக வீசப்பட்ட பந்துக்கு நோபால் தராத நடுவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேட்ஸ்மேனை திரும்ப அழைத்த கேப்டன் ரிஷப்பந்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன் பாவெலுக்கு இடுப்பு உயரத்துக்கு புல்டாஸாக வீசப்பட்ட பந்துக்கு நோபால் தராத நடுவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேட்ஸ்மேனை திரும்ப அழைத்த கேப்டன் ரிஷப்பந்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2020ம் ஆண்டு இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், நடுவரின் தவறான தீர்ப்புக்கு எதிராக சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி மைதானத்துக்குள் சென்று வாக்குவாதம் செய்தார். அன்றும் இதே ராஜஸ்தான் அணிதான், ஆனால் அணிகளும் கேப்டனும் வேறுபட்டுள்ளனர். தோனியின் வழியை இப்போது ரிஷப் பந்தும் பின்பற்றத் தொடங்கியுள்ளார்.
முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜாஸ் பட்லரின் காட்டடி சதம்(116), படிக்கலின் அரைசதம்(56) ஆகியவற்றால் 20ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. 223 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிற 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரோமென் பாவெல், குல்தீப் யாதவ் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியின் மெக்காய் கடைசி ஓவரை வீசினார்.
மெக்காய் வீசிய முதல் பந்தில் டீப் ஓவர் லாங்ஆஃப் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் பாவெல். 2-வது பந்து 7-வது ஸ்டெம்ப் நோக்கி மெக்காய் வீச, அதை ஓவர் கவர் திசையில் சிக்ஸருக்கு பாவெல் அனுப்பினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. யார் பக்கம் ஆட்டம் திரும்பும் எனத் தெரியாத நிலை இருந்தது. 3வது பந்தை மெக்காய் ஃபுல்டாஸாக பாவெல் இடுப்பு உயரத்துக்கு வீசினார், அதையும் ஓவர் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பாவல் பறக்கவிட்டார்.
ஹாட்ரிக் சிக்ஸர் அடித்ததால், அடுத்து 18 ரன்கள்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. பாவெல் இடுப்புவரை வீசப்பட்டதால் இதற்கு நடுவரிடம் நோ-பால் கோரினார். ஆனால், கள நடுவர் நோபால் தரவில்லை. ஆனால் டக்அவுட்டில் அமர்ந்திருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியினர் அனைவரும் நடுவர் நோபால் தராததற்கு அதிருப்தி நோபால் வழங்கக் கோரி சைகை செய்தனர். ஆனால், நடுவர் இடுப்பு மேல் செல்லவில்லை அதனால் நோபால் தரமுடியாது என்றார்.
இதனால் சிலநிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டு, குல்தீப் யாதவ், நடுவரிடம் நோபால் கோரினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் ரிஷப் பந்த், களத்தில் இருந்த ரோமென் பாவல், குல்தீப் யாதவை விளையாடியது போதும் திரும்பவாருங்கள் என்று சைகையால் பெவிலியனுக்கு அழைத்தார்.
நடுவரின் தவறான தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்து வீரர்களை ரிஷப் பந்த் திரும்ப அழைத்தார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்த மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் ரிஷப் பந்தை சமாதானம் செய்து அமரவைத்தனர். அதுமட்டுமல்லாமல் டெல்லி கேபிடல்ஸ் துணை பயிற்சியாளர் பிரவிண் ஆம்ரே மைதானத்தில் சென்று நடுவரிடம் பேசினார்.
பொதுவாக ஒரு அணியின் பயிற்சியாளர்கள் இதுபோன்று ஆட்டநேரத்தில் மைதானத்தில் சென்று நடுவரிடம் சென்று பேசுவதும், வாக்குவாதம் செய்வதும் முறையற்றது.
அதுமட்டுமல்லாமல், பவுண்டரி எல்லையில் நின்றிருந்த ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர், ரிஷப் பந்திடம் பேச அதுவாக்குவாதத்தில் முடிந்தது. இதையடுத்து, மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரோமென் பாவெல் அடுத்த இரு பந்துகளிலும் 2 ரன் அடித்து, கடைசிப்பந்தில் ஆட்டமிழந்தார்.
பொதுவாக இதுபோன்ற சர்ச்சைக்குரிய நேரத்தில் கள நடுவர் உடனடியாக மூன்றாவது நடுவர் உதவியை நாடியிருக்க வேண்டும். பேட்ஸ்மேன்இடுப்பு உயரத்துக்கு சென்ற பந்து நோ-பாலா அல்லது இல்லையா என்று முடிவு எடுத்திருப்பார்.
ஆனால், பிடிவாதமாக களநடுவர் மூன்றாவது நடுவரிடம் செல்லாதது ஏன் எனத் தெரியவில்லை. இடுப்பு உயரத்துக்கு பந்துவீசப்பட்டாலும், பேட்ஸ்மேன் பாவெல் காலை வளைத்து ஷாட் அடித்ததால் நோபால் வழங்க முடியாது என்று நடுவர் தரப்பில் கூறப்பட்டாலும் சர்ச்சைக்குரிய நேரத்தில் மூன்றாவது நடுவரை நாடியிருக்கலாம்.
இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் தோனி கடந்த 2020ம் ஆண்டு நடுவரிடம் வாக்குவாதம் செய்ததோடு ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். ஒருவர் டி20 போட்டியில் முதல்முறையாக பேட்ஸ்மேன்களை திரும்ப அழைத்த ரிஷப் பந்த் என்று விமர்சித்துள்ளார்.
மற்றொரு நெட்டிசன் தோனியிடம் இருந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்யக் கற்றுக்கொண்ட ரிஷப்பந்த் எனக் கிண்டல் செய்துள்ளார். தோனியின் அகாடெமிக்கு ரிஷப் பந்தை வரவேற்கிறோம் என்றும் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
அன்று தோனி, இன்று ரிஷப் பந்த்.
அணிகள் வேறு அன்று சிஎஸ்கே, இன்று டெல்லி கேபிடல்ஸ்:
இரு கேப்டன்களுமே விக்கெட் கீப்பர்: அன்று தோனி, இன்று ரிஷப் பந்த்.
ஒரே எதிரணி-ராஜஸ்தான் ராயல்ஸ்,
பிரச்சினை அன்றும் நடுவர் இன்றும் நடுவர்