டேவிட் வார்னருக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு - கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு...
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மீண்டும் விளையாட வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை செயல் அலுவலர் ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் 3-வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்மித், வார்னர், பாங்கிராப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஓராண்டு தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்று ஜேம்ஸ் சதர்லேண்ட் செய்தியாளர்களிடம் கூறியது: "வார்னர் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும். விளையாட முடியாத காலத்தில் தங்கள் தகுதி திறனை மேம்படுத்தி, ஆஸ்திரேலிய அணி தேர்வாளர்களிடம் நிருபீத்துக் காட்ட வேண்டும். அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்.
அந்த வீரர்களின் நன்மதிப்பு சரிந்துவிட்டது. அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பது தேவையான ஒன்று. தடையின் ஒரு பகுதியாக விளையாடவும் வேண்டும். அனைவரும் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் பங்கேற்று விளையாடுவதை காண விரும்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.