காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஜித்துராய்க்கு 2-வது தங்கம்; புதிய சாதனையும் படைத்தார்...
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஜித்துராய் புதிய சாதனை படைத்தும் ,இரண்டாவது தங்கம் வென்றும் அசத்தியுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.
இந்தப் போட்டியின் 5-வது நாளான நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய அணியினர் பங்கேற்றனர். பாட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்திய அணியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஜித்துராய் 10 மீ ஏர் பிஸ்டல் இறுதிச் சுற்றில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இது காமன்வெல்த் போட்டிகளில் ஜித்துராய் வெல்லும் 2-வது தங்கமாகும். அவர் ஏற்கெனவே கடந்த 2014 கிளாஸ்கோ போட்டிகளிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்திய வீரரான ஓம் மிதர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் கேர்ரி பெல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதேபோன்று, பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் மெஹுலி கோஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார். நடப்புச் சாம்பியனான அபூர்வி சந்தேலா வெண்கலம் வென்றார்.
இந்தப் போட்டியில் ஏற்கெனவே பெண்கள் பிரிவில் 16 வயது மானுபாக்கர் தங்கப் பதக்கமும், ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தது கூடுதல் தகவல்.