காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு 20வது தங்கம்..! ஆடவர் பேட்மிண்டனில் லக்ஷ்யா சென் தங்கம் வென்று அசத்தல்
காமன்வெல்த் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் ஃபைனலில் மலேசிய வீரர் யாங்கை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் லக்ஷ்யா சென் தங்கம் வென்றார்.
பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. நேற்று(ஆகஸ்ட் 7) வரை இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலத்துடன் மொத்தம் 54 பதக்கங்களை வென்றிருந்தது.
கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து கனடா வீராங்கனையை 2-0 என வீழ்த்தி தங்கம் வென்றார். தனது முதல் தங்க பதக்கத்தை இந்த காமன்வெல்த்தில் சிந்து வென்றார்.
அவரைத்தொடர்ந்து ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்ஷ்யா சென் தங்கம் வென்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் ஃபைனலில் இந்தியாவின் லக்ஷ்யா சென், மலேசிய வீரர் யாங்கை எதிர்கொண்டார்.
முதல் கேம் பயங்கர விறுவிறுப்பாக இருந்தது. முதல் செட்டை மலேசிய வீரர் 21-19 என வென்றார். இதையடுத்து அடுத்த செட்டில் ஆக்ரோஷமாக விளையாடிய இந்தியாவின் லக்ஷ்யா சென், 21-9 என வென்றார். இதையடுத்து 3வது செட்டிலும் ஆக்ரோஷமாக ஆடி, யாங்கை 21-என வீழ்த்தினார். 2-1 என்ற கணக்கில் மலேசிய வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார் லக்ஷ்யா சென்.
இது இந்த காமன்வெல்த்தில் இந்தியாவின் 20வது தங்கம். இத்துடன் சேர்த்து மொத்தமாக 57 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது இந்தியா.