காமன்வெல்த் ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸில் இந்தியாவிற்கு வெள்ளி
காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸில் இந்தியா வெள்ளி வென்று அசத்தியுள்ளது.
பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துவருகின்றனர். குறிப்பாக 10ம் நாளான இன்று, தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை குவிக்கின்றனர்.
இன்று பாக்ஸிங், தடகளம், பேமிண்டன் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்த நிலையில், டேபிள் டென்னிஸிலும் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. இந்திய வீரர்கள் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் சத்தியன் ஞானசேகரன் ஜோடி, இங்கிலாந்தின் பால் டிரிங்க்ஹால் மற்றும்லியாம் பிட்ச்ஃபோர்ட் ஜோடியை எதிர்கொண்டது.
இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஷரத் கமல் - சத்தியன் ஞானசேகரன் ஜோடி, 11-8, 8-11, 3-11, 11-7, 4-11 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோற்றது. ஃபைனலில் தோற்றதால், ஃபைனலுக்கு முன்னேறியபோதே உறுதி செய்திருந்த வெள்ளி பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் ஜெயித்திருந்தால் தங்கம் வென்றிருக்கலாம். ஆனால் இங்கிலாந்து ஜோடியிடம் தோற்றதால் தங்கத்தை தவறவிட்டு வெள்ளியை வென்றது.