காமன்வெல்த் பாக்ஸிங்கில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்திய பாக்ஸிங் வீரர் அமித் பங்கல் மற்றும் பாக்ஸிங் வீராங்கனை நீத்து ஆகிய இருவரும் தங்கம் வென்றனர்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கடைசி நாளிலும் இந்தியா பதக்கங்களை குவித்துவருகிறது.
ஆடவர் 48-51 கிலோ எடைப்பிரிவு பாக்ஸிங்கில் இங்கிலாந்தின் மெக்டொனால்டை எதிர்கொண்டு ஆடிய இந்தியாவின் அமித் பங்கால், 5-0 என்ற கணக்கில் மெக்டொனால்டை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.
அதேபோல மகளிர் 45-48 கிலோ எடைப்பிரிவு பாக்ஸிங்கில் இங்கிலாந்தின் ரெண்டர் என்ற வீராங்கனையை எதிர்கொண்ட இந்தியாவின் நீத்து, அவரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். பாக்ஸிங்கில் இன்று மட்டும் இந்தியாவிற்கு 2 தங்க பதக்கங்கள் கிடைத்தது.
மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்தியாவின் பி.வி.சிந்து ஃபைனலுக்கு முன்னேறி வெள்ளியை உறுதி செய்தார்.
பேட்மிண்டன் அரையிறுதியில் சிங்கப்பூரின் ஜியா மின் என்ற வீராங்கனையை எதிர்கொண்ட பி.வி.சிந்து அபாரமாக விளையாடி 21-19 மற்றும் 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறினார். ஃபைனலுக்கு முன்னேறியதன் மூலம் சில்வர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஃபைனலில் ஜெயித்தால் தங்கம் வெல்லலாம்.
