சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ரஃபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தல்….
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்கிய ரஃபேல் நடால், பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டுடன் மோதினார்,
இதில், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார் ரஃபேல்.
இதுவரை ரிச்சர்ட் காஸ்கட்டுடன் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நடால், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார் என்பது அசத்தலான ஒன்று.
ரஃபேல் நடால் தனது மூன்றாவது சுற்றில் சகநாட்டவரான ஆல்பர்ட் ரேமோஸை சந்திக்கிறார்.
அதேபோன்று சாம்பியன் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தனது 2-வது சுற்றில் 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வைல்ட்கார்டு வீரரான பிரான்செஸ் டியாஃபோவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ஏஞ்ஜெலிக் கெர்பர் 4-6, 6-1, 6-7 (11) என்ற செட் கணக்கில் ரஷியாவின் எக்டெரினா மகரோவாவிடம் தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்ட்டி 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்தார்.
அதேபோன்று ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் 4-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வைல்ட்கார்டு வீரரான ஜேர்டு டொனால்டுசனிடம் தோல்வி கண்டார்.