செஸ் ஒலிம்பியாட்: குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான ஏற்பாடுகள்.. தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு
செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மிகக்குறுகிய காலத்தில் சிறப்பாக செய்திருப்பதாக தமிழக அரசை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் முதல் முறையாக இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த முன்வந்தது தமிழக அரசு.
செஸ் விளையாட்டை பாரம்பரியமாக விளையாடிவரும் மற்றும் இந்தியாவிற்கு 35%க்கும் மேலான செஸ் கிராண்ட்மாஸ்டர்களை வழங்கிய தமிழ்நாட்டில் செஸ் போட்டிகள் நடப்பது பெருமைக்குரியது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி உலகமே வியக்குமளவிற்கு செஸ் ஒலிம்பியாட்டை நடத்தவேண்டும் என நினைத்த தமிழக அரசு, அதற்காக தீவிரமாக ஏற்பாடுகளை செய்தது.
மாமல்லபுரத்தில் ஒரே சமயத்தில் 1414 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடும் அளவிற்கு பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டு ஆடும் நிலையில், அவர்களுக்கு தங்குமிடம், உணவு ஆகிய வசதிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு
4 ஆண்டுகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை தமிழக அரசு வெறும் 4 மாதங்களில் செய்திருப்பதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பெருமிதத்துடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் அதை சுட்டிக்காட்டி தமிழக அரசை பாராட்டினார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மிகக்குறுகிய காலத்தில் சிறப்பான முறையில் செய்துள்ளது தமிழக அரசு. எக்காலத்திலும் நினைவில் இருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.