செஸ் ஒலிம்பியாட்: குகேஷ், நிஹால் சரினுக்கு தங்கம்! வெள்ளி,வெண்கல பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகள்
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவின் குகேஷ் மற்றும் நிஹால் சரின் ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். அர்ஜுன் எரிகாசி வெள்ளியும், பிரக்ஞானந்தா உட்பட 4 பேர் வெண்கலமும் வென்றனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் நடந்துவந்த நிலையில், இன்றுடன் போட்டிகள் முடிவடைந்தன. மாலை 6 மணிக்கு தொடங்கி நிறைவு விழா நடக்கிறது.
செஸ் ஒலிம்பியாடில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் இந்தியா ஏ, பி, சி மற்றும் மகளிர் பிரிவில் ஏ, பி, சி என 6 அணிகள் கலந்துகொண்டு ஆடின.
ஆனால் ஓபன் பிரிவில் இந்தியா பி மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா ஏ ஆகிய 2 அணிகள் மட்டுமே பதக்கங்களை வென்றன. இந்தியா ஓபன் பி அணியும், இந்தியா மகளிர் ஏ அணியும் வெண்கலம் வென்றன.
தனிநபர் பிரிவில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் நிஹால் சரின் ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். அர்ஜுன் எரிகாசி வெள்ளி வென்றார்.
பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகிய நால்வரும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.