செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில், இன்று நடக்கும் முதல் சுற்றில் இந்திய அணி மோதும் போட்டிகளை பார்ப்போம்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இன்று முதல் போட்டிகள் நடக்கின்றன. நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கிவைத்தார்.
இன்று முதல் மாமல்லபுரத்தில் போட்டிகள் நடக்கின்றன. இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் 186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆடுகின்றனர்.
தினமும் ஒரு சுற்று வீதம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கவுள்ளன. இன்று நடக்கும் முதல் சுற்றில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ளும் போட்டிகளை பார்ப்போம்.
பிற்பகல் 3 மணிக்கு போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா ஏ அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. ஏ அணியில் விதித் சந்தோஷ் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, நாராயணன் மற்றும் சசிகிரன் கிருஷ்ணன் ஆகியோர் ஆடுகின்றனர்.
இந்தியா பி அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது. பி அணியில் குகேஷ், நிஹால் சரின், அதிபன் மற்றும் ரௌனாக் சத்வானி ஆகியோர் ஆடுகின்றனர்.
இந்தியா சி அணி தெற்கு சூடானை எதிர்கொள்கிறது. சி அணியில் சேதுராமன், அபிஜித் குப்தா, கார்த்திகேயன் முரளி மற்றும் அபிமன்யூ புரானிக் ஆகியோர் ஆடுகின்றனர்.
மகளிர் ஏ அணி டஜிகிஸ்தானை எதிர்கொள்கிறது. மகளிர் ஏ அணியில் கோனேரு ஹம்பி, வைஷாலி ஆர், டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் ஆடுகின்றனர்.
இந்தியா மகளிர் பி அணி வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மகளிர் பி அணியில் வந்திகா அகர்வால், சௌமியா சுவாமிநாதன், மேரி அன் கம்ஸ் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகிய நால்வரும் ஆடுகின்றனர்.
இந்தியா மகளிர் சி அணி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. சி அணியில் ஈஷா கரவடே, பி.வி.நந்திதா, சாஹிதி வர்ஷினி, பிரத்யுஷா பட்டா ஆகிய நால்வரும் ஆடுகின்றனர்.
