chennai super kings defeats delhi daredevils

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை வெற்றி பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புனே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன் மற்றும் டுபிளெசிஸ் ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்கு நிதானமாக ஆடினர். 4 ஓவர் முடிவில், சென்னை அணி வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பிளன்கெட் வீசிய ஐந்தாவது ஓவரில் அதிரடியாக ஆடிய வாட்சன், மூன்று சிக்ஸர்கள் விளாசி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார்.

இதையடுத்து பவர்பிளே ஓவர்களில் 56 ரன்களை சென்னை அணி எடுத்திருந்தது. பிளன்கெட் வீசிய 7வது ஓவரில் மறுபடியும் இரண்டு சிக்ஸர்கள் விளாசி வாட்சன் மிரட்டினார். அதன்பிறகு டேவாடிய வீசிய 9வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். 

ஒருபுறம் வாட்சன் அதிரடியால் மிரட்ட, மறுபுறம் அதிரடியாக ஆடமுடியாமல் திணறிவந்த டுபிளெசிஸ், விஜய் சங்கரின் பவுலிங்கில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு வந்த ரெய்னா உடனடியாக வெளியேற, ராயுடு களம் கண்டார். அதிரடியாக ஆடிய வாட்சன், அமித் மிஸ்ராவின் சுழலில் வீழ்ந்தார்.

அதன்பிறகு ராயுடுவும் தோனியும் ஜோடி சேர்ந்தனர். இருவருமே அடித்து ஆடி ரன் ரேட் குறைந்து விடாமல் பார்த்துக்கொண்டனர். டிரெண்ட் போல்ட் வீசிய 17வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் என தோனி அதிரடியில் மிரட்டினார். 22 பந்துகளுக்கு தோனி அரைசதம் அடித்தார்.

வாட்சன் மற்றும் தோனியின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் சென்னை அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

212 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, 9 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு அதிரடியாக ஆட தொடங்கிய நேரத்திலேயே கோலின் முன்ரோவும் வீழ்ந்தார். ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்தனர்.

ஷ்ரேயாஸ் ஐயரும் 13 ரன்களில் ரன் அவுட்டானார். மேக்ஸ்வெல்லும் அவுட்டாக, மிகப்பெரிய இலக்கை துரத்தும் டெல்லி அணியின் முதல் 4 விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. அதன்பிறகு ரிஷப் பண்ட்டுடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார்.

விஜய் சங்கர் முதலில் திணறியதால் நிதானமாக ஆடினார். ஆனால் மறுபுறம் ரிஷப் பண்ட், அதிரடியாக ஆடி, சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக அடித்து தோனியை மிரட்டினார்.

79 ரன்களில் ரிஷப் பண்ட் வெளியேறினார். இதையடுத்து சென்னை அணி வீரர்கள் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ண தொடங்கியிருப்பர். அவர்களின் நினைப்பை சிதைக்கும் வகையில், 19வது ஓவரில் விஜய் சங்கர் மூன்று சிக்ஸர்கள் விளாசினார்.

கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், விஜய் சங்கர் மற்றும் டேவாட்டியாவால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஷேன் வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.