சர்ச்சைக்குரிய சைமண்ட்ஸ், சாஹலுக்கு நண்பரானது எப்படி..?
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுடனான நட்பு குறித்து சாஹல் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் வெற்றிகரமான ஸ்பின் பவுலராக திகழ்பவர் ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல். ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்காக ஆடிவருகிறார். ஐபிஎல் முடிந்த நிலையில், பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாஹல், மனம் திறந்து பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
தோனி, கோலியுடனான உறவு குறித்து பேசிய சாஹல், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுடனான நட்பு குறித்து பகிர்ந்துள்ளார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் என்றாலே ஆக்ரோஷம், கோபம் மற்றும் ஹர்பஜன், ஸ்ரீசாந்த் ஆகிய இந்திய வீரர்களுடனான சண்டை ஆகியவை மட்டுமே நினைவுக்கு வருபவர்களுக்கு, சைமண்ட்ஸுக்கு சாஹல் நெருங்கிய நண்பர் என்ற விஷயத்தை கேட்டாலே ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
சைமண்ட்ஸுடனான நட்பு குறித்து பேசிய சாஹல், 2011 ஐபிஎல்லில் நான் அறிமுகமாகினேன். அப்போது மும்பை அணிக்காக ஆடினேன். அந்த அணியில் சைமண்ட்ஸும் இருந்தார். ஓய்வறையில் எனக்கு அருகில் தான் சைமண்ட்ஸ். ஒருநாள் இரவு, இருவரும் தூங்காமல், அறையிலிருந்து கீழே இறங்கி சென்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதன்பிறகு எனது மொபைல் எண்ணை எப்படியோ பெற்றுவிட்ட சைமண்ட்ஸ், எங்கே இருக்கிறாய் என எனக்கு மெசேஜ் அனுப்பினார். பிறகு இருவரும் வெளியே சென்றோம். அப்படியே எங்களுக்கு இடையேயான நட்பு வளர்ந்தது.
நான் எப்பொழுதெல்லாம் ஆஸ்திரேலியா செல்கிறேனோ அப்போதெல்லாம் அவருடன் சென்று மீன் பிடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்காக அவரது மனைவி பட்டர் சிக்கன் சமைக்க கற்றுக்கொண்டார். நான் சைமண்ட்ஸ் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் எனக்கு பட்டர் சிக்கன் செய்து கொடுப்பார்.
சைமண்ட்ஸ் கர்வம் கொண்ட அல்லது திமிர் பிடித்த மனிதர் எல்லாம் கிடையாது. சில நேரங்களில் தவறுதலாக புரிந்துகொள்வார். அவ்வளவு தானே தவிர திமிரெல்லாம் கிடையாது. அவருடன் நேரம் செலவழித்து பழக ஆரம்பித்தால் அவரது உண்மையான முகத்தை தெரிந்துகொள்ளலாம் என சாஹல் தெரிவித்தார்.