Call for 30 Players at National Training Camp - Coach Constantine Announcement ...
இந்திய கால்பந்து அணி தேசிய பயிற்சி முகாமுக்கு மொத்தம் 30 வீரர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர் என்றும் இதில் இருந்து தேசிய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் தெரிவித்தார் பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன்.
இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. வரும் ஜூன் 1-ஆம் தேதி மும்பையில் ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது.
இதில் இந்தியா, கென்யா, நியூஸிலாந்து, சீன தைபே அணிகள் கலந்து கொள்கின்றன. மேலும் வரும் ஜனவரி மாதம் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது. இதற்காக வீரர்கள் தேர்வு செய்யும் வகையில் பயிற்சி முகாம் மும்பையில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன், "இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நமது அணி வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். இதில் வலிமையான அணிகளை எதிர்கொள்கிறோம்.
ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக நமது அணிக்கு பல்வேறு வெளிநாட்டு அணிகளுடன் மோதும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
நியூஸிலாந்து, தைபே அணிகளை எதிர்கொள்வது சிக்கலானது. வீரர்கள் காயமின்றி இருந்தால்தான் போட்டிகளை நன்றாக எதிர்கொள்ள முடியும்.
தேசிய பயிற்சி முகாமுக்கு 30 வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து தேசிய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்" என்று அவர் தெரிவித்தார்.
