However Bangladesh has escaped from becoming nulilai Follow the

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 97.2 ஓவர்களில் 312 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்ததன்மூலம் முதல் இன்னிங்ஸில் 182 ஓட்டங்கள் பின்தங்கியபோதும், ஃபாலோ ஆன் ஆவதிலிருந்து நூளிழையில் தப்பியது வங்கதேசம்.

இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 129.1 ஓவர்களில் 494 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 194, குணரத்னே 85, டிக்வெல்லா 75 ஓட்டங்கள் குவித்தனர்.

வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய வங்கதேச அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

செளம்ய சர்க்கார் 66, முஷ்பிகுர் ரஹிம் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். 3-ஆவது நாளான நேற்றுத் தொடர்ந்து ஆடிய அந்த அணி செளம்ய சர்க்கார் 71 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக ஆடியபோதும், ஷகிப் அல்ஹசன் 23, மகமதுல்லா 8, லிட்டன் தாஸ் 5 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து முஷ்பிகுர் ரஹிமுடன் இணைந்தார் மெஹதி ஹசன் மிராஸ். இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 106 ஓட்டங்கள் குவித்தது.

மெஹதி ஹசன் மிராஸ் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தஸ்கின் அஹமது டக் அவுட்டாக, முஷ்பிகுர் ரஹிம் 161 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டாக முஸ்தாபிஜுர் ரஹ்மான் 4 ஓட்டங்களில் கிளம்ப , வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் 97.2 ஓவர்களில் 312 ஓட்டங்களோடு முடிவுக்கு வந்தது.

இலங்கைத் தரப்பில் குசல் பெரேரா, ரங்கனா ஹெராத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

வங்கதேசம் ஆட்டமிழந்ததும் 3-ஆவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதற்குமுன் மூன்றாவது செஷன் மழையால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.