மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர் செய்த கேவலமான செயல்!! கேமராவில் சிக்கினார்
ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், வார்னர்-டி காக் இடையே நடந்த சண்டை, டிவில்லியர்ஸின் மீது நாதன் லயன் பந்தை எறிந்துவிட்டு சென்றது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை ரபாடா மோதியது என சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், மூன்றாவது போட்டி நடந்து வருகிறது. ஆட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று, தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட், பந்தை சேதப்படுத்தினார். பந்தை சேதப்படுத்தியதும், பின்னர் அந்த பொருளை தனது கால்சட்டைக்குள் ஒழிய வைக்க முயற்சித்ததும் கேமராவில் பதிவானது.
இதுதொடர்பாக நடுவர்கள், அவரிடம் விசாரித்தபோது, பந்தை சேதப்படுத்தவில்லை; கறுப்புநிற துணியை மட்டும் தான் வைத்திருந்தேன், வேறு பொருள் இல்லை என தெரிவித்துவிட்டார்.
ஆனால், அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேன்கிராஃப்ட் தனது தவறை ஒப்புக்கொண்டார். அணியில் மேலும் சில வீரர்கள் இந்த செயலில் திட்டமிட்டே ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இது தனக்கு தெரிந்தே நடந்ததாகவும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் தனது கேப்டன்சியில் நடக்காது எனவும் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.