Australian Open Super Series Srikanths progress Sindhu Saina expulsion ...
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஆனால், சிந்துவும், சாய்னாவும் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் ஸ்ரீகாந்த், இந்தியாவின் சாய் பிரணீத்துடன் மோதினார்.
இதில், 25-23, 21-17 என்ற நேர் செட்களில் சாய் பிரணீத்தை தோற்கடித்து வென்றார்.
ஸ்ரீகாந்த் தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் யூகி ஷியை எதிர்கொள்கிறார்.
யூகியுடன் கடைசியாக மோதிய இரு ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் வென்றுள்ளார் என்பது கொசுறு தகவல்.
மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் தாய் ஜூ இங்குடன் மோதினார்.
இதில், 21-10, 20-22, 16-21 என்ற செட் கணக்கில் தாய் ஜூ இங்கிடம் தோல்வி அடைந்தார். சிந்து, தாய் ஜூ இங்கிடம் 7-ஆவது முறையாக தோற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு காலிறுதியில் சாய்னா நெவால் சீனாவின் சன் யூவிடம் மோதி 17-21, 21-10, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
