புனே
அடுத்தடுத்து நான்கு இந்திய விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய பவுலர்களை பாராட்டியே ஆகனும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே தெரிவித்துள்ளார்.
இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே தெரிவித்ததாவது:
“செய்தியாளர்கள் கூறியது போல் ஒரே ஒரு நாள் மோசமாக அமைந்துவிட்டது. ராகுலும், ரஹானேவும் களத்தில் நின்ற போது, ஓரளவு நல்ல நிலையில் இருந்தோம். ராகுல் அவுட் ஆனதும், அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது.
இதில் சில வீரர்கள் மிக சாதாரணமாக விக்கெட்டுகளை இழந்து விட்டனர். நிச்சயம் இந்த ஆடுகளம் சவால் மிக்கதே. எனவே 2–வது இன்னிங்சில் இன்னும் கட்டுப்பாட்டோடு ஆட வேண்டியது முக்கியம்.
இது போன்ற ஆடுகளத்தில் முதலில் அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதில் தான் கோட்டை விட்டு விட்டோம். முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் 80 ஓட்டங்களையும், கடைசி விக்கெட்டுக்கு 60 ஓட்டங்களையும் விட்டுக்கொடுத்ததால் நாங்கள் விரும்பியபடி ஆஸ்திரேலியாவை சீக்கிரம் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
இங்கு ஆக்ரோஷமாகவும், அதே சமயம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும். ஆடுகளத் தன்மைக்கு ஏற்ப ஷாட்டுகளை தொடுக்க வேண்டும்.
மொத்தத்தில் இது எங்களுக்குரிய நாள் அல்ல. ஆஸ்திரேலிய பவுலர்களை நாம் பாராட்டியாக வேண்டும். நாளை (இன்று) மீதமுள்ள 6 விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்பதில் கவனம் செலுத்துவோம்” என்று அவர் தெரிவித்தார்.
