ஆசிய கோப்பை வில்வித்தை: மூன்று தங்கங்கள், இரண்டு வெண்கலங்கள் வென்று இந்தியா அசத்தல்...
ஆசிய கோப்பை வில்வித்தையின் 'ஒன்றாம் நிலை' போட்டியில் இந்தியா மூன்று தங்கங்கள், இரண்டு வெண்கலங்கள் என ஐந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.
ஆசிய கோப்பை வில்வித்தையின் 'ஒன்றாம் நிலை' போட்டியில் மகளிருக்கான தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் பிரமிளா டெய்மேரி 7-3 என்ற கணக்கில் ரஷியாவின் நடாலியா எர்டைனீவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
அதேபோன்று ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ், கோரா ஹோ, கெளரவ் லம்பே அணி 27-26 என்ற கணக்கில் மங்கோலிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் முஸ்கான் கிரார் 139-136 என்ற கணக்கில் மலேசியாவின் நதிரா ஜகாரியா சஸாதுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
இதேபோல, மது வேத்வான் 6-5 என்ற கணக்கில் மங்கோலியாவின் அல்டாங்கெரல் எங்துயாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் முஸ்கான் கிரார் - திவ்யா தயால் - மிருனாள் ஹிவ்ராலே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 227-221 என்ற கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.