காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார் ஆஷ்டன் அகர்…
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகி உள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில் ஆஷ்டன் அகர் பீல்டிங் செய்தபோது அவருடைய வலது கை சுண்டு விரலில் பந்து தாக்கி எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் ரிச்சர்ட் ஷா, “பீல்டிங்கின்போது பந்து தாக்கியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆஷ்டன் அகருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் அவருடைய சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் உடனடியாக ஆஸ்திரேலியா செல்கிறார். அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக சிறப்பு நிபுணரிடம் ஆஷ்டன் அகர் ஆலோசிக்கவுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களிலும் தோற்று தொடரை இழந்துள்ள நிலையில், ஆஷ்டன் அகரின் விலகல் அந்த அணிக்கு பின்னடைவாக அமையும்.